25.12.08

எனக்குப் பிடித்த இரண்டு விருதுகள்





இந்த ஆண்டு மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதெமி விருதும், வைதீஸ்வரனுக்கு விளக்கு விருதும் கிடைத்துள்ளது. மேலாண்மை பொன்னுசாமி, பொன்னீலன், கந்தர்வன், சமுத்திரம், தமிழ்ச்செல்வன், பா ஜெயப்பிரகாசம் முதலிய படைப்பாளிகள் முற்போக்கு முகாமைச் சார்ந்தவர்கள் என்று முத்திரை குத்தினாலும், அவர்கள் அதையும் மீறி படைப்பாளிகள். முதன் முதலாக மேலாண்மை பொன்னுசாமி கதை ஆனந்தவிகடனில் பிரசுரமானபோது, பரவாயில்லை ஆனந்தவிகடன் இவர் எழுதுகிற கதையெல்லாம் போட ஆரம்பித்துவிட்டார்களே என்று மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. செய்திகளுக்குக் கொடுக்கும் மதிப்பு படைப்புகளுக்குக் கிடைப்பதில்லை. படிக்கிற சுவாரசியத்தையே அடிப்படையாகக்கொண்டு செய்திகளை வெளியிடுகிற பெரும் பத்திரிகைகள் படைப்பாளிகளைக் கண்டுகொள்வதில்லை. ஐந்தாம் வகுப்புவரை படிக்கார மேலாண்மை பொன்னுசாமி 22 சிறுகதைத் தொகுதியும், 6 நாவல்களும், 6 குறுநாவல் தொகுதியும் எழுதியுள்ளார். இது அசாத்தியமான முயற்சியாகவே எனக்குத் தோன்றுகிறது. கிராமத்தில் வசிக்கும் பொன்னுசாமி, இந்த விருது கிராமத்து எழுத்தாளர்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறார்.


ஜெயகாந்தன் மாதிரி மேலாண்மை பொன்னுசாமியும் தனக்கான கல்வியை தானாகவே பெற்று ஒரு படைப்பாளியாக மிளிர்ந்தள்ளார். அவருக்கு விருட்சம் சார்பில் வாழ்த்துகள்.


சாகித்ய அகாதெமி பரிசு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் உரிய தருணத்தில் கிடைப்பதில்லை. அதனால் 'விளக்கு' என்கிற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உரிய படைப்பாளிகளுக்கு விருது கொடுத்து கெளரவம் செய்கிறது. அந்த முறையில் இந்த ஆண்டு கவிஞர் வைதீஸ்வரனை கெளரவித்துள்ளது. கவிஞர் வைதீஸ்வரன் 'எழுத்து' காலத்திலிருந்து எழுதி வரும் கவிஞர். யாராலும் கண்டுகொள்ளாத கவிஞர். 70வயதுக்குப் பிறகு அவருக்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது. விளக்கு அமைப்பு சாகித்ய அமைப்பு அளிக்கும் தொகையை கிட்டத்தட்ட அளிக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் சிலரால் இந்தப் பரிசு ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பரிசு குறித்து ஒரு குறை எனக்குண்டு. ஏன் விளம்பரப்படுத்தாமல் இந்தப் பரிசை கொடுக்கிறார்கள் என்பதுதான் அந்தக் குறை. அதைபோல் விழாவை ஏற்பாடு செய்வதும் எல்லோருக்கும் தெரியாமல் செய்கிறார்கள். ஒரு படைப்பாளியை கெளரவிக்கும்போது ஒரு பெரிய விழா மாதிரி நடத்த வேண்டாமா? வெறும் சடங்கு மாதிரி நடத்தினால் என்ன அர்த்தம்? வைதீஸ்வரனுக்கும் விருட்சம் சார்பில் வாழ்த்துகள்.

19.12.08

சில குறிப்புகள் - 10




ஸ்டெல்லாபுரூஸ் காப்பாற்றி விட்டார்


இந்த மாதம் 7ஆம் தேதி எனக்கு விஜய் டிவியிலிருந்து போன் வந்தது ஸ்டெல்லாபுரூஸ் பற்றி விஜாரித்தார்கள். அவர் இருக்குமிடம் பற்றியெல்லாம் கேட்டார்கள். சொன்னேன். பின் நீங்கள் அவரைப் பற்றி எதாவது சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். டிவியில் அவரைப் பற்றி சொல்ல சொல்கிறார்கள். சரி என்றேன்.


டிவி மோகம் யாரையும் விடுவதாயில்லை. பலர் டிவியை வைத்துக்கொண்டுதான் பொழுதைக் கழிக்கிறார்கள். நான் 200க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்றாலோ 50 சிறுகதைகளுக்குமேல் எழுதியிருக்கிறேன் என்றாலோ என் வீட்டில் உள்ள யாருக்கும் ஒரு பொருட்டல்ல.


ஒரு பத்திரிகையை விடாப்பிடியாக 21 ஆண்டுகள் நடத்தி வருகிறேன் என்றாலும் ஒரு அலட்சியம். டிவியிலும் இத்தனை சேனல்கள் இருந்தாலும் இலக்கியவாதிகளுக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது. சினிமா நடிகர்கள் நடிகைகள்தான் அவர்களுக்கும் முக்கியம். நான் டிவி சேனல் அதிபதியாக இருந்தால் கவிதை வாசிப்பதை தினமும் வைத்திருப்பேன். குறிப்பிட்ட நேரத்தில் தமிழ் நாட்டில் உள்ள எல்லா கவிஞர்களும் தினம் தினம் கவிதை வாசிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்திருப்பேன். ஆனால் டிவியிலோ சீரியல்தான் ஓடும். விதம் விதமான மனதைக் கெடுக்கும்படி இந்த சீரியலை எல்லோரும் விழுந்து விழுந்து பார்க்கிறார்கள். சீரியலைப் போல பல நிகழ்ச்சிகள். உலகம் முழுக்க பல பாதகமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன. இந்தப் பாதகமான நிகழ்ச்சிகளிலிருந்து ஒவ்வொரு நாளும் நாம் தப்பித்துக்கொண்டு வர வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன் இலக்கிய நண்பர்கள் டிவியில் வர ஆரம்பித்தபோது, அவர்கள் அவ்வப்போது எனக்கு செய்திகள் அனுப்பிக்கொண்டிருப்பார்கள். சிலர் sms அனுப்புவார்கள். உண்மையில் அந்த நேரத்தில் அவர்களை டிவியில் பார்க்கமுடியாமல் அவசரமாக அலுவலகத்தை நோக்கி ஓடிக்கொண்டிருப்பேன். அப்படியும் சிலவற்றைப் பார்ப்பேன். பின் எனக்கும் இதுமாதிரி சந்தர்ப்பம் வராதா என்று என் மனதில் தோன்றாமலில்லை. ஆனால் அதுமாதிரியான சந்தர்ப்பம் எளிதில் எனக்குக் கிட்டவே இல்லை. என் இலக்கிய நண்பர் ஒருவர் ஒவ்வொரு இலக்கிய நண்பராகக் கூப்பிட்டு ஒரு நிகழ்ச்சியை தினசரி காலை நேரத்தில் நடத்திக்கொண்டு வந்தார். போனால் போகிறதென்று எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை அந்த இலக்கிய நண்பர் ஏற்படுத்திக்கொடுத்தார். எனக்கோ பரபரப்பு அதிகமாகிவிட்டது. அந்த டிவி ஸ்டேஷனுக்கு குறிப்பிட்ட நேரத்தில் போய்ச் சேர்ந்தேன். நிகழ்ச்சியைத் தயாரிப்பவர்கள் மெதுவாக வந்தார்கள். என்னைப் பேட்டி காண்பவர்கள் அட்டகாசமாக மேக்கப் செய்து வந்தார்கள். யாருக்கும் நான் எதுமாதிரி எழுத்தாளன் என்பது தெரியவில்லை. என்னைப் பார்த்தாலே நான் எழுதுபவனா என்ற சந்தேகம் கூட வந்திருக்கும். அவர்கள் என்னுடன் பேச ஆரம்பித்த பிறகு அந்த சந்தேகம் உறுதி ஆகியிருக்கும். அவர்கள் என்னிடம் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று கேட்டுக்கொண்டார்கள்.


நான் எல்லாவற்றையும் சொன்னேன். அதை வைத்துக்கொண்டு அதிகம் மேக்கப் இல்லாமல் இருந்த என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். நானோ டிவியில் தோன்ற போகிறேன் என்ற பதட்டத்துடன் காத்திருந்தேன். ஒரே இடத்தைப் பார்க்கச் சொன்னார்கள். சிறிது குரலை உயர்த்திப் பேசச் சொன்னார்கள். தலையை அப்படியும் இப்படியும் அசைக்க வேண்டாம் என்றார்கள். கைகள் மூலம் சைகை செய்ய சொன்னார்கள். என் கால்களில் மாட்டியிருந்த செருப்பு தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் சொல்ல சொல்ல எதுவும் எனக்கு சரியாக வரவில்லை. ஆனால் என்னைக் கேள்வி கேட்டவர்கள் அட்டகாசமாக இருந்தார்கள். ஒரு பெண்மணியும் பார்க்க நன்றாக இருந்தார். அவர்கள் சிரித்து சிரித்து கேள்விகள் கேட்டார்கள். ஒவ்வொரு முறை அவர்கள் கேள்வி கேட்கும்போது படம் எடுக்கும் இடத்தை நோக்கி ஒரு சிரிப்பு சிரிப்பார்கள். படம் பிடிக்க வந்திருப்பவர் வேறு மொழியைச் சேர்ந்தவர். அவர் அவர்களுக்கு ஏதோ ஒரு சிக்னல் கொடுப்பார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு அதிலிருந்து தப்பித்தேன். பின் எப்படி வந்திருக்கிறது என்று கேட்டேன். நன்றாக வந்திருக்கிறது என்றார்கள். எப்போது டிவியில் வரும் என்று கேட்டேன். ஏதோ ஒரு தேதியை நேரத்தைச் சொன்னார்கள். குறித்துக்கொண்டேன்.


பின் வீட்டிற்கு வந்து எல்லோரிடமும் சொன்னேன். அலுவலக, இலக்கிய நண்பர்களிடம் சொன்னேன். ஒருவரை ஏற்பாடு செய்து டிவியில் வருவதை சீடியில் பதிவு செய்ய சொன்னேன். அதற்கு இவ்வளவு செலவாகும் என்றார்கள். சரி என்றேன்.


எனக்கு சிபிச்செல்வன் என்ற இலக்கிய நண்பர் உண்டு. அவருடன் காலை நேரத்தில் நான் வாக் செல்வேன்.


''என்ன ஒரு மைசூர் பாக் பாக்ஸ் கொடுத்தார்களா?'' என்று அவர் கேட்டார்.


''ஆமாம்,'' என்றேன். பின் அவரைப் பார்த்து, ''நீங்களும் அடுத்த முறை அந்த நிகழ்ச்சிக்கு வருவீர்கள்,'' என்றேன்.


''எங்களைப் பற்றியெல்லாம் சொன்னீர்களா?'' ''சொன்னேன். சொன்னேன். உங்கள் பெயரைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். ''எனக்கே ஆச்சரியம் எப்படி தைரியத்தோடு இவ்வளவும் சொன்னேன் என்று...முதலில் ஒரு மாதிரி இருந்தது. அப்புறம் ஒன்றுமில்லை..'' என்றேன்.


என் நிகழ்ச்சியைப் பலர் பார்த்தார்கள்.


குறிப்பாக என் உறவினர்களைச் சொல்ல வேண்டும். நான் டிவியில் வருவதால் அவர்கள் மத்தியில்தான் நான் முக்கியமான ஆளாக இருந்தேன். நான் பேசியதைக் கேட்டு அவர்கள் போன் செய்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். நான் கவிதை கதை எழுதி என்ன பிரயோசனம்? யாரும் படிக்கக்கூட மாட்டார்கள். ஆனால் நான் டிவியில் பேசியதைப் பார்த்து என் குடும்பத்தினர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஒரு சில தினங்களுக்கு அவர்கள் மதிப்பில் உயர்ந்து இருந்தேன். அலுவலகத்திலும் இவர் டிவியில் வந்தார் என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்தார்கள். சிடியில் வந்தபிறகு நான் அடிக்கடி போட்டு போட்டு பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு தப்பை கண்டு பிடித்தேன்.


நான் தைரியமாகத்தான் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னேன். ஆனால் 'வந்து..' என்ற சொல்லை அடிக்கடி உபயோகித்திருந்தேன். கேட்கும்போதெல்லாம் இந்த 'வந்து' ரொம்ப தொந்தரவு செய்வதுபோல் தோன்றியது. எனக்கு டிவியில் வருவதைப் பற்றி மறந்தும் போய்விட்டது.


இந்த ஆண்டு மார்ச்சு மாதம் ஸ்டெல்லாபுரூஸ் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் அவருடைய நண்பர் என்ற முறையில் என்னை சன் டிவியில் பேட்டி கண்டார்கள். சந்தோஷமில்லாமல் அவர் தற்கொலையை துக்கத்துடன் சொல்லும்படி ஆயிற்று. டிவியில் வருவதை யாரிடமும் நான் குறிப்பிடவில்லை. சந்தோஷமில்லாத நிகழ்ச்சி அது. ஆனால் பலர் என்னை டிவியில் பார்த்ததாகச் சொன்னார்கள்.


மார்ச்சு, ஏப்ரல் என்று அந்த நிகழ்ச்சியும் பறந்து போய்விட்டது. ஸ்டெல்லாபுரூஸ் என் நினைவிலேயே இருந்து கொண்டிருந்தார்.


நான் எதிர்பார்க்காத எதிர்பாரத மனிதரிடமிருந்து ஏற்பட்ட மரணம் இது. எனக்கு அவர் மீது கோபம் கூட ஏற்பட்டது. கோழை தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் என் இன்னொரு இலக்கிய பெண்மணி, 'அவர் தற்கொலை செய்து கொண்டதுபோல ஒரு தைரியம் யாருக்கும் வராது என்றார். அவர் கோழை இல்லை. அவர் தெரிந்துதான் தன் முடிவை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதற்குப் பயங்கர துணிச்சல் வேண்டும்,' என்றார் அந்த இலக்கிய பெண்மணி.


எனக்கு அவர் சொன்னதைக் கேட்டவுடன் ஆச்சரியமாக இருந்தது. ஏன்எனில் புத்திக் கூர்மையுள்ள இலக்கிய பெண்மணி அவர். ஆனாலும் ஸ்டெல்லாபுரூஸ் தற்கொலையை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவர் நடந்துபோகும் போது விபத்தில் இறந்தாலும் எதாவது நியாயம் இருக்குமென்று நினைத்தேன்.


இதெல்லாம் நடந்து முடிந்தபின், இந்த டிசம்பர் மாதம்தான் எனக்கு விஜய் டிவியிலிருந்து நிகழ்ச்சி தயாரிப்பாளர் சிலர் பேசினார்கள். 'ஸ்டெல்லாபுரூஸ் பற்றி நீங்கள் சொல்ல வேண்டும்' என்றார்கள். என் பெயரை வேறு ஒரு இலக்கிய நண்பர் பிரபல பத்திரிகையில் இருப்பவர் சிபாரிசு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சி என்னவென்று தெரியாமல் சரி என்று சொல்லிவிட்டேன். எப்படியும் என்னை பேட்டி எடுப்பது என்ற தீர்மானத்தில் அவர்கள் இருந்தார்கள். வீடு தேடி மூன்று பேர்கள் வந்தார்கள். அதிக மேக்கப் இல்லாமல் என்னை ஒரு கோணத்தில் பார்த்தபடியே அமர்ந்து இருக்கச் சொன்னார்கள். பிறகு ஸ்டெல்லாபுரூஸ் பற்றி பேசுங்கள் என்றார்கள். ஏன் அவர் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று சொல்ல சொன்னார்கள். நானும் ஸ்டெல்லாபுரூஸ் பற்றி பேச ஆரம்பித்தேன். திரும்பத் திரும்ப நான் சொன்னதையே சொல்வதுபோல் பட்டது. ஒரு இடத்தில் ருத்திரன் என்று உச்சரித்தேன். பின் ஸ்டெல்லாபுரூஸ் போட்டோ எதாவது இருக்குமா என்று கேட்டார்கள்.


'அவர் தற்கொலை செய்துகொள்ளுமுன் எடுத்த போட்டோ உள்ளது,' என்று கம்ப்யூட்டரில் காட்டினேன். நான் சமீபத்தில் டிஜிட்டல் காமெரா ஒன்று வாங்கியிருந்தேன். அதில் பலரை போட்டோ எடுத்துக்கொண்டிருந்தேன். ஸ்டெல்லாபுரூஸையும் ஒரு சந்தர்ப்பத்தில் படம் பிடித்திருந்தேன். என்னைப் பேட்டி எடுத்தவர்கள்,


'திங்கள் இரவு பத்துமணிக்குப் பாருங்கள்,' என்றார்கள். அதுவும் நான் கேட்டபிறகுதான் அவர்கள் சொன்னார்கள். உடனே எல்லோருக்கும் இந்தச் செய்தியைத் தெரியப்படுத்தினேன். அலுவலகத்தில் பலருக்குச் சொன்னேன். எனக்கு உள்ளுக்குள் ஒரு வருத்தம் இருந்தது. ஸ்டெல்லாபுரூஸ் தற்கொலையைப் பற்றி ஏன் சொல்ல வேண்டும் என்று. மரணத்தை அவர் ஏற்றுக்கொண்ட விதம் சரியில்லை. ஆனால் அவர் மரணத்திற்கு மரியாதைத் தர வேண்டுமென்று நினைத்தேன். பொதுவாக எந்த நிகழ்ச்சியையும் நான் விரும்பி டிவியில் பார்க்க மாட்டேன். டிவியில்லாமல் என்னால் இருக்க முடியும். ஆனால் புத்தகமும், கம்ப்யூட்டரும் இல்லாமல் இருக்க முடியாது. எதாவது எழுதுவது என்று நினைத்தால் கம்ப்யூட்டரில்தான் என்னால் முடியும். திங்கள் அன்று பத்து மணிக்கு விஜய் டிவி முன் அமர்ந்தேன். 'நடந்தது என்ன?' என்ற அந்த நிகழ்ச்சியைப் பார்த்தபோது, சகிக்க முடியவில்லை. மனைவி இறந்துபோனதைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட கணவனைப் பற்றி, கணவன் இறந்துபோன துக்கம் தாங்க முடியாத மனைவியின் தற்கொலை..இதை விவரிக்க பலருடைய பேட்டி. ஸ்டெல்லாபுரூஸ் பேர் வந்தவுடன் நான் வருகிறேனா என்று பார்த்தேன். நான் வரவே இல்லை. என்னைப் பேட்டி எடுத்துச் சென்றவர் என்னை கட் செய்து விட்டார். ஆனால் நான் குறிப்பிட்ட ருத்ரன் வந்திருந்தார். அதே நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சாருநிவேதிதா வந்திருந்தார். எனக்கோ ஒரு மாதிரியாக இருந்தது. அடுத்த நாள் அலுவலகத்தில் சில நண்பர்கள் கிண்டல் செய்தார்கள். என் உறவினர்களெல்லாம் இரவு பத்துமணிக்குமேல் விழித்திருந்து பார்த்து ஏமாந்து விட்டார்கள். விஜய் டிவிகாரர்களுக்கு என்னிடம் நான் வரவில்லை என்பதைச் சொல்ல வேண்டுமென்ற நாகரீகம் கூட இல்லை. ஸ்டெல்லாபுரூஸுற்கே நான் அவரைப் பற்றி பேசுவது பிடிக்கவில்லை என்று நினைத்தேன். அதனால்தான் வர விடாமல் செய்து விட்டார். எனக்கோ நிம்மதியாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் நான் வராமல் இருந்தது ரொம்ப நல்லது என்று நினைத்துக்கொண்டேன். ஸ்டெல்லாபுரூஸ் என்னைக் காப்பாற்றி விட்டார்.

12.12.08

சில குறிப்புகள் - 9

மேடைப் பேச்சும் நானும் / 1

எனக்கு மேடையில் பேச வேண்டுமென்ற ஆசை என் பள்ளிக்கூட நாட்களிலேயே தொடங்கி விட்டது. ஆனால் ஆசை மட்டும்தான் உண்டு. தைரியமாக சொல்ல வேண்டியதை மேடையில் ஏறி பிறர் முன் சொல்ல முடியுமா என்பதில்தான் சிக்கல். அந்தக் காலத்தில் பள்ளிகளில் மேடையில் பேசும் திறனுக்கு பரிசு கொடுப்பார்கள். நான் படித்த ஒரு ஆரம்பப் பள்ளியில் பேசும் போட்டி வைத்திருந்தார்கள். நானும் துணிச்சலாகப் பேச பெயர் கொடுத்துவிட்டேன். பேர் கொடுத்துவிட்டேனே தவிர அவர்கள் கொடுத்தத் தலைப்பில் பேசுவதற்கு பெரிய போராட்டமே நடத்த ஆரம்பித்தேன். என்ன பேசப் போகிறேன் என்பதை ஒரு தாளில் எழுதி வைத்துக்கொண்டேன். பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் கலந்துகொண்டு பேசுபவரின் பெயர்களை வாசித்து வந்தார்கள். கூடவே ஒரு கட்டளையும் இட்டார்கள். 2 நிமிடத்திற்குமேல் பேசக் கூடாது என்பதுதான் அந்தக் கட்டளை.

நான் பேசுவதற்கான தருணம் வந்தது. அதற்குள் என் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. நான் பேசி எல்லோரும் கேட்டு எல்லோரும் என் பேச்சில் மயங்க வேண்டும் என்றெல்லாம் தோன்றியது. என் பெயரைக் கூப்பிட்டார்கள். எனக்கோ உதறல். கையில் எழுதியிருந்ததைப் பார்த்துப் படித்தேன். படிக்கும்போது ஒரு தப்பு செய்துவிட்டேன். மாணவ மாணவிகளே என்று குறிப்பிடுவதற்குப் பதில் மாணவ மனைவிகளே என்று சொல்லிவிட்டேன். அவ்வளவுதான் ஒரே சிரிப்பு. ஏன் சிரிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவே பல நிமிடங்கள் ஆயிற்று. வேகமாக மீதி எழுதியிருப்பதையும் படித்துவிட்டு ஓடி வந்துவிட்டேன். இந்த நிகழ்ச்சியை என்னால் மறக்கவே முடியவில்லை.

தேர்தல்போது பல அரசியல்வாதிகள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அவர்களெல்லாம் ஒரே மாதிரியான விஷயத்தை ஒரு மேடையில் பேசியதை எல்லா மேடைகளிலும் பேசுவார்கள். ஒப்பிப்பதுபோல் எல்லோரும் திறமையாகப் பேசுவார்கள்.

மேடையில் திறமையாகப் பேசும் படைப்பாளிகள் பலர் என் நண்பர்கள். க.நா.சுப்பிரமணியம் மேடையில் பேசும்போது எந்தத் தலைப்பிலும் பேசுவார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசக்கூடிய திறமையானவர். எந்தத் தலைப்பு குறித்தும் எந்தத் தயாரிப்பும் இல்லாமல் பல மணிநேரம் பேசக்கூடிய திறமையானவர். சென்னையில் அவர் இருந்தபோது என்னை இலக்கியக் கூட்டம் ஒன்றை மாதம் மாதம் நடத்துங்கள் என்று தூண்டியவர். முதன்முதலில் மாதம் ஒருமுறை அவரை வைத்தக்கொண்டு கூட்டம் நடத்த வேண்டுமென்று எனக்குத் தோன்றிகொண்டே இருக்கும். அப்போது எப்படி ஒரு கூட்டம் நடத்துவது அதற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்றெல்லாம் குழம்பிக்கொண்டிருந்தேன். க.நா.சு பேசுவதைப் போல் எழுதுவும் செய்வார். அதேபோல் படிக்கவும் செய்வார். படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் ஒருநாள் பொழுதைக் கழிப்பார். படிக்க ஆரம்பித்தால் கையில் எது கிடைத்தாலும் படிக்காமல் இருக்க மாட்டார். நான் முதன் முதலாக நவீன விருட்சம் இதழிற்கு எதாவது எழுதுங்கள் என்று க.நா.சுவிடம் போய் கேட்டேன். உடனே எழுதிய ஒரு கட்டுரையை என்னிடம் கொடுத்தார். எனக்கு ரொம்ப ஆச்சரியம். கேட்டவுடன் கொடுத்துவிட்டார் என்பது. அவரை வைத்துக்கொண்டு மேடையில் பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்த எனக்கு பெரிய ஏமாற்றம். அவர் தில்லிக்குச் சென்றவுடன் இறந்தும் விட்டார்.

நான் கூட்ட நடத்தவேண்டுமென்ற விதி என்னை விடவில்லை என்று தோன்றியது. லையன் சீனிவாசன் என்ற நண்பர் ஒருவர். அவர் சபீனா போன்ற ஒரு பொருளை செய்து காயின் என்ற பெயரில் விற்க ஆரம்பித்திருந்த தருணம். அப்போது ஹிந்துவில் Engagement என்ற பகுதியில் வரும் விளம்பரத்திற்கு என்னை இலக்கியக்கூட்டம் நடத்தும்படி தூண்டினார். எல்லா செலவையும் அவரே பார்த்துக்கொள்வதாக வேறு குறிப்பிட்டார். முயற்சி செய்தால் என்ன என்று ஆரம்பித்ததுதான் விருட்சம் இலக்கியக் கூட்டம். முதன்முதலில் காசியபன் என்ற படைப்பாளியை வைத்துக்கொண்டு நடத்தினேன். கூட்டம் நடத்தத் தொடங்கியபோதுதான் தெரிந்தது. எனக்கு மேடையில் சரியாகப் பேச வரவில்லை என்பது.

நான் கூட்டத்தில் பேச ஆரம்பித்தபோது, இப்படி ஆரம்பித்தேன், 'எல்லோருக்கும் வணக்கம்....இப்போது காசியபன் பேசுவார்,' என்று கூறிவிட்டு போய் உட்கார்ந்து கொண்டேன். காசியபன் யார்? அவர் என்னன்ன எழுதியிருக்கிறார் போன்ற பல விபரங்களைப் பற்றி பேசவில்லை. கூட்டத்தில் செய்ய வேண்டிய ஜாலவித்தையும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் காசியபனோ அவருக்கே உரித்தான பாணியில் பல விஷயங்களைப் பற்றி பேசினார். முதல் கூட்டம் நிறைவாகவே நடந்தது. சொற்பமானவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களுடைய பெயர்களையும் முகவரிகளையும் ஒரு நோட்டில் குறித்துக் கொண்டேன்.

(இன்னும் வளரும்)

1.12.08

சில குறிப்புகள் - 8

நண்பர்களே,
நவீன விருட்சம் இதழுக்கு பலர் கடிதங்கள் எழுதிக்கொண்டே இருப்பார்கள். பெரும்பாலும் இதழ் ஆரம்பித்த சமயத்தில். தனிப்பட்ட முறையிலும் சிலர் எழுதுவார்கள். அக் கடிதங்களைப் படிக்க சுவாரசியமாக இருக்கும். கடந்த 80வது இதழ் நவீன விருட்சத்தில் அப்படி சில கடிதங்களைப் பிரசுரம் செய்தேன். இங்கேயும் தர விரும்புகிறேன். சும்மா சும்மா கவிதையே போரடிக்கிறது.
விருதுநகர் - ஜூலை 3 1991
அன்புள்ள அழகியசிங்கர்,
விருட்சம் இதழ் இங்கு கிடைத்தது. ஏன் இத்தனை பக்கங்கள். இத்தனை எழுத்துத் திணிப்புகள்? அறிமுக எழுத்தாளர் என்ற விவரிப்பெல்லாம் தேவையற்ற முகாந்திரங்கள். விருட்சம் பக்கங்கள் குறைத்து வெளியிடலாம். பக்க அதிகரிப்பு மட்டுமே இதழை 'கனமானதாக' ஆக்கி விடாது. பிரமிள் எழுதிய கவிதை 'அமெச்சூர்' தனமாக தொனிக்கிறது. சா. அரங்கநாதன் கவிதை 'தச்சூர்' போனேன் பரவாயில்லை. ஞானக்கூத்தனின் 'மதிப்புக் கூறுதல்' கட்டுரை மிக எளிமையாக நல்ல உண்மை ஒன்றை சொல்லிக் காட்டி உள்ளது. அங்கீகாரம் வேண்டியிருப்பதில் சிறு பத்திரிகையில் எழுதும் இலக்கிய கொம்பர்களும் உட்பட்டவர்கள்தான். 'சிறு பத்திரிகை' என்ற பிரமைக்கு இமேஜ்க்கு இறுதிவரை உட்படாமல் 'ழ' வெளிவந்தது. விருட்சம் படிப்படியாய் அத்தகைய இமேஜ்க்கு உள்ளாகி ஒரு
typical Tamil Little Magazineன் பரிபூர்ண லட்சணங்களின் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது...'வீடு திரும்புதல்' கவிதையின் அற்புத கவித்வம் மொழி பெயர்ப்பில் காணாமல் போயிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. விரைவில் சென்னை திரும்ப இருக்கிறோம்

அன்புடன்
ஸ்டெல்லா புரூஸ்

ச இராகவன் யாழ்ப்பாணம்

பெருமதிப்பிற்கும் வணக்கத்திற்குரிய அழகியசிங்கர் அவர்கட்கு,

நீங்கள் வெளியிட்டு வரும் நவீன விருட்சம் இதழ்கள் சில தொடர்ச்சியாக வாங்கிக் கிடைத்ததில் மெய்சிலிர்த்து இக்குறிப்பை எழுதுகிறேன். ஆர்ப்பாட்டமில்லாமல் கைக்கடக்கமாக ஒரு கனதியான சிற்றிதழாக நவீன விருட்சம் வெளிவருவதை கண்டு, உங்கள் மீது பெருமதிப்புக் கொண்டுள்ளேன். தவிரவும் உங்களது சிறுகதைகள் ஒருசிலவற்றை வாசித்ததில் பெருமகிழ்வுற்றேன். எளிமையான முறையில் அலாதியான நடையில் நவீனத்துவத்தைப் பிரதிபலிக்கும் சமூகப் பார்வையுள்ள உங்களது சிறுகதைகள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. மேலும் ஜெகன், மோகினி, அழகியசிங்கர் ஆகியோருக்கிடையிலான உரையாடல் சலிப்பினைத்தராத வரவேற்புக்குரிய உத்தி. அசோகமித்திரன் எழுதிவரும் பத்தி பல்வேறு விடயங்களை அறிமுகப்படுத்துவதில் முதன்மை வகிக்கிறது. அண்மைக்காலமாக கொம்பன் எழுதிவரும் பத்தியும் சுவாரசியமாகத்தானிருக்கிறது. ராஜேஸ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்று ஒரு பாக்கெட் நாவல் எழுத்தாளராக இதுவரை நான் எண்ணியிருந்த ஸ்டெல்லா புரூஸ் ஒரு தீவிரமான சிற்றிதழ் எழுத்தாளன் என்பதை நவீன விருட்சம் மூலமாகத் தெரிந்து கொண்டேன். இங்கு யாழ்ப்பாணத்தில் நவீன விருட்சம் அளவுக்கு எளிமையானதும் நேர்த்தியானதும் கனதியானதுமான சிற்றிதழ் இதுவரை வெளியானதில்லை என்பதையும் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.


My Dear Mouli, (Azhagiyasingar), Card I Monday

Jaundice relapsed. Recovering. I need ¸கிழானல்லி Please get this from High Court grounds. In front of ‘Laxmy Narain’, on the Telephone Bill Office side, near the footwear repairs, there is Palmist by name subramanian.


Mention my name. He will help you find the herp.
Subbu was here twice regarding his job within 7 days. He must come again.


No news from Amirtharaj. Perhaps he does not want to call without bringing some money or other. This is absurd. Tell him to come. I need people to talk to. It helps.


I have a poem for you. But this must be published only
under the pen name I have given for it.
Am sending a friend who called at this point in writing this letter. He is sure to do the work.
With love,


T Ajithram Premil