21.4.09

கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா







இரண்டு வாரங்களுக்கு முன் திரிசூலம் ரயில்வே நிலையத்தில் அமர்ந்திருந்தபோது எங்களுடைய முதல் கேள்வி கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா என்பதுதான். எங்களிடையே பலத்த சர்ச்சையை இந்தக் கேள்வி ஏற்படுத்தியது. என்னைப் பொறுத்தவரை கவிதை புரிய வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன். ஆனால் கவிதை மனதிலிருந்து எழுதுவதால் புரியாமல் போக வாய்ப்புண்டு. கவிதையை எழுதுகிற மனமும், கவிதையை வாசிக்கிற மனமும் வேறு வேறு தளங்களில் இயங்குபவை. அதனால் கவிதை புரியவில்லை என்று ஒரு வாசிப்பவன் சொல்லி கவிதையைத் தூக்கிப் போட்டுவிட முடியும். என் நண்பர்கள் சிலர் கவிதை புரியவில்லை என்றே சொல்லாதே என்று அறிவுரை கூறுவார்கள். ஏனெனில் கவிதை புரியவில்லை என்று சொன்னால் எழுதுபவர்களுக்குப் பெரிய கித்தாப்பு ஏற்பட்டுவிடும். ஆனால் கவிதை எளிதாகப் புரியவேண்டும் என்று பாரதியார் கூறியபடி எளிதாக பல கவிதைகளைப் படைத்திருக்கிறார்.



சிலசமயம் கவிதை புரியும் ஆனால் கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியாது. அதனால் கவிதையைப் பொருத்தவரை இரண்டுவிதமான அபிப்பிராயங்கள் தோன்றாமல் இருப்பதில்லை. ஒன்று கவிஞரின் அபிப்பிராயம். இரண்டாவது வாசகனின் அபிப்பிராயம். எனக்குத் தெரிந்து நகுலன் ஆனந்த் கவிதை ஒன்றைப் படித்துவிட்டு, என்ன எழுதியிருக்கிறார், புரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.




ஷாஅ என்பவரின் ஒரு கவிதையைப் பார்ப்போம்.




எனது



வீணையின் நரம்புகளுக்கு



பாடத்



தெரியாது



நடனம்தான்



தெரியும்.



அவை



ஆடினால்



பார்க்கமுடியாது



கேட்கத்தான்



முடியும்



மேலே குறிப்பிடப்பட்ட கவிதை படிப்பதற்கு எளிதாக தோன்றினாலும், என்ன சொல்ல வருகிறார் என்பதை வாசகர்கள் மூளையைக் கசக்கிக்கொண்டுதான் இருக்க வேண்டும். கவிதை மூலம் எளிமையாகச் சொல்லுதல் வேறு. அப்படி எளிதாக சொல்வதன் மூலம் புரிந்துகொண்டு விட முடியும் என்று சொல்ல முடியாது. ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்லுவது எளிதாகப் புரிவதுபோல் இருக்கும். ஆனால் ஆழமாக யோசித்தால் ஒன்றும் புரிபடாது. நம் வாழ்க்கைக்கு ஜே கே தத்துவம் உதவாது. என் நண்பர் ஒருவர் ஜே கே பேசுவதைக் கேட்டு எக்ஸ்பிரஸ் காஃபி குடிப்பதுபோல் இருக்கிறது என்பார். இன்னும் பல நண்பர்கள் ஜேகே படித்துவிட்டு இயல்பு நிலையிலிருந்து மாறி விட்டதாக தோன்றும். நான் ஜே கேயைத் தீவிரமாகப் படித்தபிறகு, எனக்கு கோபமே இல்லாமல் போய்விட்டது. யாராவது திட்டினால்கூட கேட்டுக்கெண்டிருப்பேன் சும்மா. நாராணோ ஜெயராமன் என்ற ஒரு கவிஞர். 'வேலி மீறிய கிளைகள்' என்ற தொகுதி க்ரியா பதிப்பகம் மூலம் வெளி வந்திருக்கிறது. இத் தொகுப்பு வந்தவுடன் அவர் எழுதுவதையே நிறுத்திவிட்டார். காரணம் ஜே கே. ஜே கே மாதிரி ஒருவரைப் பார்த்தபிறகு எழுதுவதில் ஒரு அர்த்தமுமில்லை என்பார் அவர். எனக்கு ஜே கே மீது கோபம் வரும்.




அதேபோல் கவிதை எழுதுவதிலும், கவிதையை வாசிப்பதிலும் நம்மைப் பெரிதும் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். நாம் கவிதை எழுதுகிறோம். கவிதை வாசிக்கிறோம். எதை வாசிக்கிறோமோ அதை வேறு மாதிரி எழுத முயற்சிக்கிறோம். நாம் வாசிக்கும்போதே நம்முடைய உலகத்தை கவிதை பிடித்து விடுகிறது. அதேபோல் கவிதை எழுதுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் கவிதை எழுதுபவனை கவிதை காட்டிக் கொடுத்துவிடுகிறது. இது கவிதை எழுதுபவனுக்கே தெரியாது.




'கொல்லும் முகம்' என்ற சம்பத்தின் கவிதையைப் பார்ப்போம்.




சுழலும் விழிகளில் நீர் ஏனோ?



கழநிகளில் பாய்ந்ததுதான் போதாதோ




மறையும் மாலையில் ஒளிர்ந்திடும் -



உன் முகம்தான் என் வாழ்வின் விதிப்பயனோ?




தெரிந்ததில்லை பயணம் தொடர்ந்தக்கால்



தெரிந்ததில்லை - பருவமதில் - மாற்றத்தில் -



தெரிந்ததுதான் யாருக்கு எப்போது?



இயம்புமோ உன் முகம்தான் அதைப்பற்றி?



என் உறக்க, விழிப்பில், ஊர்ந்தவளே



என் சிந்தையில் படர்ந்த கொடிப் பூவே



என் மூளையில் பூத்த வெண் மலரே



உன் முகம்தான் என்னைக் கொன்றதடி.



மூளையில் வெண் மலர் பூத்தால் எப்படி இருக்கும்? எதிர்பாராதவிதமாக சம்பத் மூளை வெடித்து இறந்துவிட்டார். இந்தக் கவிதை மூலம் அவர் இது மாதிரி ஒரு முடிவு அவருக்கு ஏற்படுமென்று தெரியாமல் தெரிவித்து விட்டதாக எனக்குத் தோன்றும்.



அதேபோல் ஆத்மாநாம் கவிதை ஒன்றை பார்க்கலாம்.




நான் ஒரு ஞானியுமில்லை



நான் ஒரு சித்தனுமில்லை



பித்தம் பிடித்தும் பிடிக்காத மேதை நான்



படித்தும் படிக்காத புலவன் நான்



வைத்தியம் தெரிந்தும் செய்து கொள்ளா நோயாளி நான்



உண்மையைத் தொட்ட ஒரு பேதை நான்



உத்தமனில்லை ஆனால் பொய் சொல்லத் தெரியாது



சத்தியவான் இல்லை ஆனால் உண்மையே பேசுபவன்



இவற்றையும் மீறி இருக்கிற கொஞ்சம் மட்டுமே நான்



இந்தக் கவிதை தெளிவாகவே ஆத்மாநாமின் மனநிலையைக் காட்டுகிறது. நான் என்ன சொல்ல வருகிறேனென்றால் இக் கவிதை எழுதுபவனுக்கு மட்டுமல்ல வாசிப்பவனையும் வசப்படுத்துகிறது. வாசிப்பவன் இந்தக் கவிதையைப் படித்து மயங்கிவிட்டால் தொலைந்தான். அவனையும் இந்தக் கவிதைப் பிடித்துக் கொண்டு விடும். கவிஞனின் பிரக்ஞையை வாசகனைத் தெட்டுவிடும்.



இது கவிஞனின் பிரச்சினையாக மட்டுமல்லாமல், வாசிப்பவனின் பிரச்சினையாகக் கூட மாறிவிடத் தொடங்கும். இதைப் பற்றி இன்னும் யோசித்து எதாவது எழுத முடியுமாவென்று பார்க்கிறேன். இதை வாசிப்பவர்களும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கலாம். (இன்னும் வரும்)

9.4.09

தேர்தலும் நானும்........










(நன்றி : தினமணி)

நான் சாதாரணத்திலும் சாதாரண வாக்காளன். ஓட்டுப் போட உரிமை எனக்கு வந்தபிறகு, ஓட்டுப் போடும் தருணத்தை வேண்டுமென்றே தவற விட்டிருக்கிறேன். ஏனோ இந்த அரசியல் கட்சிகளின் மீது அளவுகடந்த அலட்சியம். இந்தியா மாதிரியான ஒரு பெரிய தேசத்தை ஆள்வது சாதாரணமான விஷயமல்ல. எல்லோரையும் திருப்தி செய்யும்படியான ஒரு ஆட்சியை யாராலும் கொடுக்க முடியாது. பாரதிய ஜனதாவும், காங்கிரசும் குட்டி குட்டி மாநிலக் கட்சிகளின் தயவால் 5 ஆண்டுகள் ஒரு திருப்புமுனையும் இல்லாமல் ஆட்சியை முடித்துக்கொண்டது பெரிய சாதனையாகவே எனக்குத் தோன்றுகிறது. முதலில் இதைச் சாதித்தவர் முன்னாள் பிரதம மந்திரி நரசிம்மராவ்தான்.



இப்போதோ எந்த அளவிற்கு உடைய முடியுமோ அந்த அளவிற்கு தேசிய கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதாவும் உடைந்து போயிருக்கின்றன. தேர்தல் நடப்பதற்கு முன்பே இந்தத் துண்டு துண்டான நிலையை உணர முடிகிறது. தேர்தலுக்குப் பிறகு என்ன நிலை என்பது தெரியவில்லை.
தேர்தல் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. ஏராளமான பணம் செலவாகும். தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர், ராணுவத்தினர், அரசாங்கத்தில் உத்தியோகம் பார்ப்பவர்கள் என்று பலர் பலவிதமாக முடுக்கப்பட்டு சிரமத்திற்கு உட்படுவார்கள்.
எப்படியாக இருந்தாலும் எதாவது ஒரு கட்சி ஆட்சி செய்ய வரவேண்டும். இப்போது நடக்கப்போகும் தேர்தலில் அப்படி நடக்க வாய்ப்புள்ளதா என்பது சந்தேகமாக உள்ளது.



ஒவ்வொரு முறையும் வாக்குப் போடும்போது அதிருப்தி நிலை அதிகரித்துக்கொண்டே போகும். ஒரு சமயத்தில் நான் பலருக்கும் ஓட்டுப் போடுவேன். அல்லது எனக்குத் தெரியாத தனியாக நிற்கும் தனிநபருக்கு ஓட்டுப் போடுவேன். ஒரு முறை திமுகாவிற்கும், இன்னொரு முறை அதிமுகாவிற்கும் ஓட்டுப் போடுவேன். நான் யாருக்கு ஓட்டுப் போட்டாலும், போடாவிட்டாலும் ஆட்சியை ஏற்படுத்தும் சக்தி என் ஓட்டிற்கு இல்லை. பல லட்சக்கணக்கான மனிதர்களில் நானும் ஒருவன் அவ்வளவுதான்.
தேர்தலை ஒடடி நடக்கும் வன்முறை எல்லோரையும் போல என்னையும் கவலைப்படுத்தும். ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் என் வீட்டுச் சுவரில் பல கட்சிகளின் விளம்பரம் அலங்கரிக்கும். உற்சாகமுள்ள கட்சிக்காரர்கள் சுவர்களை நாசம் செய்துவிடுவார்கள். தேர்தல் முடிந்தபின்னும் சுவரொட்டிகளைத் தாங்கி நிற்கும் சுவர்கள் இருந்துகொண்டே இருக்கும்.



தேர்தலைச் சந்திப்பவர்கள் ஏகப்பட்ட பணத்தைத் தண்ணீராக செலவு செய்துகொண்டே இருப்பார்கள். கருப்புப் பணத்தையெல்லாம் தாராளமாகச் செலவிடுவார்கள். ஒரு வங்கியிலோ, அரசாங்கத்திலோ ஒருவர் பணியில் சேர்வதற்கு, குறைந்தபட்சம் கல்வித் தகுதி, தேர்வு எழுதி அதில் வெற்றி பெறும் தகுதி என்றெல்லாம் தேவை. ஆனால் ஒரு அரசியல் பிரமுகருக்கு எதுமாதிரியான தகுதி வேண்டும்?

1.4.09

கவிதையும் பார்வையும்

கவிதைகள் ஒரே பார்வையைக்கொண்டு வெளி வருகின்றன. அப்படி வெளி வருகின்ற கவிதைகளைப் படிக்கும்போது, ஒரே மாதிரியான கவிதைகளை வாசிக்கிறோம் என்ற உணர்வு எழுந்தாலும், ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு உணர்வு உலகத்தை நமக்குச் சித்தரித்துக் காட்டுகிறது. உதாரணமாக சமீபத்தில் மரணத்தைப் பற்றி அதிகமான கவிதைகளை இரு கவிஞர்கள் ஒரே சமயத்தில் எழுதி உள்ளார்கள். இது ஒருவரைப் பார்த்து இன்னொருவர் எழுதியிருக்கலாம் அல்லது கவிதைகளைப் பரிமாறிக்கொள்ளாமலே எழுதியிருக்கலாம். இப்படி வாசிக்கிற கவிதைகளில், கவிதையின் பொருள் ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொருவரும் மரணத்தை எப்படி எழுதியுள்ளார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இப்படிப் பார்க்கும்போது மரணத்தைப் பற்றி இவர்கள் இருவர்தான் எழுதி உள்ளார்கள் என்பது அர்த்தமில்லை. இதற்குமுன் மரணத்தைப் பற்றி பலர் எழுதி உள்ளார்கள்.
காலச்சுவடு இதழில் வெளிவந்த 'சிபிச்செல்வன்' கவிதையான 'சாவிற்காகக் காத்திருக்கும் துயரம் மிகுந்த கணங்கள்' என்ற கவிதையை எடுத்துக் கொள்வோம். இக் கவிதை மரணத்தைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகளின் தொடர்ச்சி.
பெருந்துயரிலலைகிறேன் சுடு பாலைவெளிகளில்
இருளடர்ந்த இரவுகளில் வேதனையின் உச்சத்தில்
அலறியழுகிறேன். இரக்கமற்ற இரவுகள்
மெல்ல மெல்ல நெரித்து விளையாடுகின்றன
எல்லையற்ற
பெருவெளியில் சாகிறார்கள்
வாழ்வதற்காக ஆசைப்படுகிறவர்கள்
இதேபோல் 'பூமா ஈஸ்வரமூர்த்தி' மரணத்தைப் பற்றி எழுதிய நீண்ட கவிதையைப் பார்ப்போம். 'சிற்றெறும்பு' என்ற கவிதை,
சின்ன
சட்டகத்துள்
பாதுகாக்கப்பட்ட
சின்ன கடவுள்
சின்ன மேஜையில்
சின்னக் கிண்ணத்தில்
கல்கண்டு கலந்த பால்
அலையில்லாத
பாற்கடலில்
செத்து மிதந்தன
சிற்றெறும்புகள் மேலே
குறிப்பிடப்பட்ட இரு கவிதைகளையும் கூர்ந்து பார்த்தால், முதல் கவிதையில் தென்பட்ட கவியின் பார்வை எந்த அளவிற்கு மரணத்தைச் சொல்வதில் இரண்டாவது கவிதையிலிருந்து விலகி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். முதல் கவிதையில் வெளிப்பட்ட நெருக்கம், இரண்டாவது கவிதையில் இல்லை. அடிப்படையில் மரணத்தைப் பற்றி கூறினாலும், முதல் கவிதை ஒரு கருத்தை கூறுகிறது. இரண்டாவது கவிதை ஒரு அனுபவத்தை வெளிப்படுத்துகிறது. இக் கவிதைகள் இரண்டும் இருவிதப் பார்வைகளை மரணத்திலிருந்து விலகியே வெளிப்படுத்துகின்றன. பொதுவான அம்சமாக இரு கவிதைகளிலும் மரணத்தைப் பற்றிய பதைப்பு வெளிப்படவில்லை.
ஆனால் முதல் கவிதையில் படிப்பவரின் பிடிப்பு வெளிப்படுவதுபோல், இரண்டாவது கவிதையில் இல்லை. ஞானக்கூத்தன் இதை ஒரே துறையில் எழுதப்படுகிற கவிதைகள் என்று குறிப்பிடுகிறார். இங்கு நாம் ஆராய்வது கவிதை ஒரே துறையில் எழுதப்பட்டாலும், ஒவ்வொரு கவிதையும் எந்தப் பார்வையை முன்னிறுத்துகிறது என்பதுதான்.
உதாரணமாக, 1. அழகியசிங்கர் எழுதிய 'அவர்' என்ற கவிதையும்
2. எஸ் வைதீஸ்வரன் எழுதிய, 'பிரிவுபசாரம்' என்ற கவிதையும்
3. ஞானக்கூத்தன் எழுதிய, 'நாயர் ஓய்வுப் பெற்றார்' என்ற கவிதையும் பார்ப்போம்.
இம் மூன்று கவிதைகளும் நீóóண்ட காலம் பணி புரிந்தவரின் ஓய்வுப் பெறும் அனுபவத்தை மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. அதாவது ஓய்வு பெறுதல் என்ற அடிப்படையான துறையைக் கொண்டு, ஆனால் மூன்று விதமான பார்வைகளை நம் முன் இக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. முதலில், 'அவர்' என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம்.
'எழுந்தவுடன் தெரிந்தது
அவர் பணியிலிருந்து
ஓய்வு பெறும் நாளென்று
இக் கவிதையில் கவியின் குரல் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஒருவரைப் பற்றி பணிபுரியும் ஒருவர் கூறும் கூற்றாக ஒலிப்பது தெளிவாகத் தெரிகிறது. ஓய்வு பெறும் தறுவாயில் புன்னகை பூத்தவாறு இருப்பதாக கவியின் கூற்றாக வெளிப்படுகிறது.
'அவர் எப்போதும்
அந்த இடத்தில்
சில சந்தர்ப்பங்களில்
அவர் இல்லாமலிருந்தாலும்
அவர் அமரும் விதத்தில்
என்று விவரிக்கும்போது, ஓய்வு பெறப் போகிற ஒருவரைப் பற்றி, பணியில் இருக்கும் ஒருவர் ஒருவித இரக்க உணர்ச்சியோடு, ஓய்வு பெறுபவர் பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
'ஏதோ ஒரு தருணத்தில்
எங்கோ ஒரு புள்ளியில்
அலுவலக விதியை
சந்திக்கும் சந்தர்ப்பத்தில்
சிறு சிறு உரசல்கள்
என்று குறிப்பிடும்போது, அலுவலகத்தில் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் இருவரிடையே அலுவலகச் சம்பந்தமாக சில சமயம் தகராறு ஏற்பட்டிருந்தாலும், அதெல்லாம் அலுவலகத்தில் ஏற்படுகிற சாதாரண நிகழ்ச்சியாக விவரிக்கப்படுகிறது. காலையில் எழுந்ததிலிருந்து ஒருவர் ஓய்வுப் பெறும் ஒருவரைப் பற்றி தீவிரமாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒற்றைக் குரலைக் கொண்ட கவிதையாக வெளிப்படுகிறது..
இரண்டாவதாக 'பிரிவுபசாரம்' கவிதையை எடுத்துக்கொள்வோம்.
உபயோகம் தீர்ந்த
கரும்பலகை எழுத்துக்கள்
ஒரு கைத்துடைப்பின் வீச்சில்
காற்றை
நரைத்த தூசுகளாக்கும்
என்று குறிப்பிடும்போது இக் கவிதையில் பார்வை ஓய்வு பெறும் ஒருவர் மீது கவனத்தைத் திருப்புகிறது. இக் கவிதையில் கவியின் கூற்றாக ஓய்வுப் பெறும் ஒருவரின் வழியாக வெளிப்படுகிறது. அதாவது 'அவர்' கவிதையில் ஓய்வு பெறுபவர் பற்றி இன்னொருவர் வைக்கும் பார்வையை கவியின் குரல் தெளிவாக முன் வைக்கிறது. ஆனால் 'பிரிவுபசாரம்' என்ற கவிதையில் கவியின் கூற்றாக முன் வைக்கப்படுவது ஓய்வு பெறப்போகிற ஒருவர் பற்றி அவரே தெரியப் படுத்துகிற கூற்றாக ஒலிக்கிறது. இதனால்,
'அவசரமாய் உடனே
அங்கே உயர்ந்த
பல்வேறு நீளக்கைகள்
ஒரு கூட்டப் பாம்புகளாய்
தெரிகிறது. ஓய்வு பெறுவதில் ஓய்வுப் பெறப்போகும் நபருக்கு விருப்பம் இல்லை என்றும், ஆனால் மற்றவர் கூட்டப் பாம்புகளாய் மாறி துரத்தி விடுவதாக கவிக் கூற்றாக வெளிப்படுகிறது.
மூன்றாவது கவிதையான 'நாயர் ஓய்வுப் பெற்றார்' என்ற கவிதையைப் பார்ப்போம். இக் கவிதையிலும் ஓய்வுப் பெறும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் கூறும் கூற்றாக இக் கவிதையின் பார்வை வெளிப்படுகிறது. ஓய்வுப் பெறப் போகிற நபர் ஒரு மலையாளி.
'அதற்கு முன்னே ஒருநாள் அவரை
தற்செயலாகத் தெருவில் கண்டேன்
'வாருங்கள் நாயர் கடையில் தேநீர்
குடிக்கலாம்' என்றேன்.
அவரென்னைப் பார்த்தார்
இப்படிச் சொல்லும்போது வேண்டுமென்றே குஞ்சு குட்டன் நாயரின் வெங்காய வேர் மீசையில் கோபம் ஏற்படுவதைக் காண முடிகிறது.
குஞ்சு குட்டன் நாயர்
ஓய்வுபெற்ற நாளன்று சம்பிரதாயமாக
எல்லோரும் அவரது சேவையைக்
குறிப்பிட்டுப் பேசினார்கள்.
ரோஜா மாலையை நெருடிக் கொண்டு
நாயர் என்னவோ நன்றி சொன்னார்
என்று இக் கவிதை முடிகிறது. இம் மூன்று கவிதைகளையும் உற்றுப் பார்க்கும்போது, ஓய்வு பெறுகிற ஒரே விஷயத்தை இம் மூன்று கவிதைகள் வெளிப்படுத்தினாலும், மூன்று வெவ்வேறு பார்வைகளை இம் மூன்று கவிதைகளும் வெளிப்படுத்துகின்றன.
'அவர்' என்கிற கவிதை ஓய்வு பெறப் போகிற நபரைப் பற்றி அக்கறையை கவிக்குரல் மூலம் வெளிப்படுகிறது. 'பிரிவுபசாரம்' என்ற கவிதை ஓய்வுப் பெறுவதற்கு கவிக்குரலோனுக்கு விருப்பமில்லை என்றும், ஆனால் மற்றவர்கள் இரக்கமற்று நீளக் கைகள் கூட்டப் பாம்புகளாய் துரத்துவதுபோல் வெளிப்படுகிறது. மூன்றாவது கவிதையான, 'நாயர் ஓய்வுப் பெற்றார்,' என்ற கவிதையில், ஓய்வுப் பெறப்போகும் குஞ்சு குட்டன் நாயருக்கும், கவிக் குரலோனுக்கும் கொஞ்ச நாட்கள்தான் பழக்கம். அதனால்தான் நாயர் ஓய்வுப் பெறும் தறுவாயை
ரோஜா மாலையை நெருடிக் கொண்டு
நாயர் என்னவோ நன்றி சொன்னார்
என்று முடிக்கிறார்.இன்னும் சுருக்கமாகப் பார்க்கும்போது முதல் கவிதை: ஓய்வுப் பெறும் நபர் மீது இரக்கப்படும் சுபாவமாக கவியின் குரல் வெளிப்படுகிறது. இரண்டாவது கவிதை : ஓய்வு பெறுவதை விரும்பவில்லை. ஆனால் வலுக்கட்டாயமாக எல்லோரும் துரத்துவதாக ஒருவித அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. மூன்றாவது கவிதை : ஓய்வுப் பெறப் போவதால் ஏற்படப்போகும் உணர்ச்சிப் போராட்டம் சிறிதும் இல்லை. அதனால் ஓய்வுப் பெறப்போகும் ஒரே சம்பவத்தைக் கொண்ட மூன்று வெவ்வேறான பார்வைகளைக் கொண்ட கவிதைகளாக இதைக் குறிப்பிடலாம்.
( 27.12.2003 அன்று எழுதப்பட்டது)