25.2.09

இலக்கியவட்டமும் காஞ்சிபுரம் வெ நாராயணனும்

ந்தப் புத்தகக் காட்சியின்போது வெ நாராயணன் மரணம் அடைந்த விஷயத்தை அவருடைய நண்பர்கள் தெரிவித்தார்கள். வருத்தமாக இருந்தது கேட்பதற்கு. நாராயணன் வட நாட்டிற்கு பயணம் செய்துவிட்டு சென்னை திரும்பும்போது Heart Attack வந்து இறந்து போனதாக நண்பர்கள் சொன்னார்கள்..நாராயணன் காஞ்சிபுரத்தில் இலக்கிய வட்டம் என்ற பெயரில் நூறுக்கும் மேலாகக் கூட்டம் நடத்தியவர். கொஞ்சங்கூட அலுக்காமல் மாதம் ஒரு முறை பள்ளிக்கூடம் ஒன்றில் கூட்டம் நடத்துவார். கூட்டத்தில் பங்கு பெறுபவர்களுக்கு மதியம் சாப்பாடு ஏற்பாடு செய்வார். காஞ்சிபுரம் தாண்டி வருபவர்களுக்கு போக வர செலவிற்குப் பணம் தருவார்.


நான் மூன்று முறை அவர் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறேன். அவர் இலக்கியவட்டம் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில், நானும் மாதம் ஒருமுறை விருட்சம் இலக்கிய சந்திப்பு நிகழ்த்திக் கொண்டிருந்தேன். முதல் முறையாக அவர் கூட்டத்தில் என்னைப் பேச அழைத்தபோது எனக்குத் திகைப்பாக இருந்தது. இலக்கியக் கூட்டம் என்ற பெயரில் என்ன பேசுவது என்பது புரியாத புதிராக இருந்தது. எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு பேசினாலும் என்னால் 5 நிமிடங்களுக்கு மேல் பேச முடியுமா என்பது சந்தேகமாக இருந்தது. மேலும் நான் எழுதிக்கொண்டு பேசினாலும் 5 நிமிடங்களுக்குமேல் உரையாற்ற முடியுமா? அதனால் நாராயணன் என்னைக் கூப்பிட்டபோது நான் மட்டும் வரவில்லை என்று கூறி என்னுடன் ரா ஸ்ரீனிவாஸன், கோபிகிருஷ்ணனையும் கூட அழைத்துப் போனேன். இலக்கியக்கூட்டங்களில் கலந்துகொள்வதில் பெரிதும் விருப்பமில்லாதவர் ஸ்ரீனிவாஸன், கோபிகிருஷ்ணன் என்னைப் போல் பேச வேண்டுமென்று ஆசைப் படுபவர். ஒருமுறை அவரை விருட்சம் சார்பில் பேச அழைத்திருந்தேன். அவர் அலுவலகம் போகாமல் ஒருநாள் முழுவதும் பேசுவதற்கு தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தார். கூட்டத்தில் பேசி முடித்தவுடன் அவர் உடல் வேர்வையில் தொப்பலாக நனைந்து போயிருந்தது.


நாங்கள் மூவரும் காஞ்சிபுரம் சென்றோம். கூட்டத்தில் நான் பேசத் தயங்கும்போது கோபிகிருஷ்ணன் பேசுவார். அவர் தயங்கும்போது ஸ்ரீனிவாஸன் பேசுவார். நாங்கள் மூவரும் அன்று சிறப்பாகவே உரையாற்றினோம். ஏற்பாடு செய்த நாராயணன் எங்களை நன்றாக கவனித்து அனுப்பினார். நாராயணனுக்கு அபார ஞாபக சக்தி உண்டு. யார் கூட்டத்தில் பேசினாலும் அதை அப்படி திரும்பவும் சொல்லுவார்.

இரண்டாவது கூட்டம். ஞானக்கூத்தனின் கவிதைகளுக்காக நடந்தது. முக்கிய விருந்தாளி ஞானக்கூத்தன். பதிப்பாளர் என்ற முறையில் நானும் கூட சென்றேன். ஞானக்கூத்தன் பேசுவதில் வல்லவர். அவர் ஒருவரே கூட்டம் முடியும் வரை அலுக்காமல் திறமையாகப் பேசக் கூடியவர்.அன்று மதியம் வரை ஞானக்கூத்தன் பேசிக்கொண்டிருந்தார். பலர் கேட்ட வினாக்களுக்கு பதிலும் அளித்துக்கொண்டிருந்தார். வெ நாராயணனுக்கு நகைச்சுவை உணர்வு உண்டு. கூட்டம் பற்றி ஒரு sum up கொடுப்பார். அதைப் பெரும்பாலும் நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்துவார். வெ நாராயணன் அனுப்பிய பல அழைப்பிதழ்கள் என் பார்வைக்கு இப்போது எதுவும் கிடைக்கவில்லை. சிலசமயம் அந்த நகைச்சுவையை ரசிக்க முடியும். எந்த லாபமுமின்றி இலக்கியக் கூட்டம் நடத்த முடியுமென்ற நாராயணனின் வெறி எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நானும் அப்படித்தான் என்றாலும் நாராயணனை என்னால் தோற்கடிக்க முடியவில்லை.

மூன்றாவது கூட்டத்திற்கு நான் என் அலுவலக நண்பரான ராஜன் பாபுவுடன் சென்றேன். காலச்சுவடு பற்றிய கூட்டம். அந்தக் கூட்டம் பரபரப்பான கூட்டமாக மாறிவிட்டிருந்தது. அடிதடி சண்டையே வந்துவிடும் போலிருந்தது. அக் கூட்டத்திற்கு சுந்தர ராமசாமியும், கண்ணனும் வந்திருந்தார்கள். நவீன விருட்சம் இதழ் ஒன்றை சுந்தர ராமசாமியிடம் கொடுத்தேன். இதழைப் பார்த்த சுந்தர ராமசாமி அதில் விஸ்வம் வரைந்த அசோகமித்திரன் படம் சரியில்லை என்று குறிப்பிட்டார். காலச்சுவடு இதழைப் பாராட்டும் கூட்டமாக மாறாமல் அதை இகழந்து பேசும் கூட்டமாக அது மாறிவிட்டது. மேலும் கூட்டம் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவுக்கு வராமல் இருந்தது. நாராயணனுக்கே அக் கூட்டம் போகும் விதம் பிடிக்காமல் இருந்திருக்குமோ என்று தோன்றியது. எனக்கு அவசரமாகக் கிளம்ப வேண்டும்போல் தோன்றியது. ராஜன்பாபுவும் அவசரப்பட்டார். காலச்சுவடு குறித்து நான் எழுதிய கட்டுரையை அவசரம் அவசரமாகப் படித்தேன். பின் நான் நாராயணனிடமிருந்து விடைபெற்று சென்றேன். வழக்கம்போல் நாராயணன் கூட்டம் முடியும்போது விருந்தாளிகளுக்கு போய்வருவதற்கான செலவை கொடுக்கமாலிருக்க மாட்டார். அந்த முறை அவர் கொடுக்கவில்லை. நல்லகாலம் விருட்சத்திற்கு அதுமாதிரியான கூட்டம் ஒன்றும் நடத்தப்படவில்லை.

சென்னை வரும்போது ஏன் கூட்டத்திற்குப் போனோம் என்று தோன்றியது. அன்று காலைதான் எழுத்தாளர் காசியபன் மனைவி இறந்து விட்டார். தகவல் சரியாகத் தெரியவில்லையால், நான் போய்ப் பார்க்கமுடியாமல் போய்விட்டது. நான் எப்போதுமே என் அனுபவத்தைத்தான் பெரும்பாலும் கதையாக எழுதுவேன். கூட்டம் போய் வந்த அனுபவத்தை சுண்டுவிரல் என்ற பெயரில் ஒரு கதை எழுதினேன். அதைப் படித்த வே நாராயணன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். 'உங்களுக்கு வழிசெலவிற்குப் பணம் கொடுத்ததாக ஞாபகம்' என்று எழுதியிருந்தார். நான் இல்லை என்று குறிப்பிட்டிருந்தேன். என் கடிதம் பார்த்தவுடன் உடனே பணம் அனுப்பிவிட்டார். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பொதுவாக இலக்கியக் கூட்டம் நம் control ல் வராது. சண்டை வருவதற்கான வாய்ப்பும் அதிகம். அதனால்தான் முதன் முதலில் நான் இலக்கியக் கூட்டம் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தவுடன், பிரமிள், it is dangerous என்று கடிதம் எழுதியிருந்தார். எனக்கு அது முதலில் புரியவில்லை. ஆனால் சண்டை நடந்தாலும் இலக்கியக் கூட்டம் மூலமாக எழுத்தாளர்களைப் பார்க்க முடிகிறது. நானும் விருட்சம் சார்பில் 3, 4 ஆண்டுகள் கூட்டம் நடத்தி நிறுத்திவிட்டேன். வெ நாராயணனும் தொடர முடியாமல் நிறுத்திவிட்டார். ஒவ்வொரு முறை நான் காஞ்சிபுரம் போனால் வெ நாராயணனைப் பார்க்காமல் இருக்க மாட்டேன். அவர் வீட்டிற்கெல்லாம் சென்றிருக்கிறேன். அவருடைய ஆர்வத்தை என்னால் மறக்க முடியாது. வெ நாராயணனுக்குப் பிறகு திரும்பவும் இலக்கிய வட்டத்தைத் துவங்கப் போவதாக அவருடைய நண்பர்கள் குறிப்பிட்டார்கள். புத்தகக் காட்சியின் போது அவருடைய நண்பர்கள் வெ நாராயணனிடமிருந்து பலர் புத்தகங்களை (இலக்கிய கூட்டம் நடக்குமிடத்தில் பல பதிப்பக நண்பர்களிடமிருந்து புத்தகங்களை வாங்கி விற்பனைக்கு வைக்கும் பழக்கம் அவருக்குண்டு) கடனுக்கு வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் போனதைப் பற்றி குறிப்பிட்டார்கள். கேட்க சற்று வருத்தமாக இருந்தது.

2.2.09

பிரிவும் மரணமும்




என் நண்பர், நாகேஷ் இறந்த செய்தியைச் சொன்னபோது, நாகேஷ் பற்றிய ஞாபகத்தில் என் மனம் புகுந்து கொண்டது. பல ஆண்டுகளாக நாகேஷ் என்ற நடிகர் நடித்தப் பல படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் ஒரு போதும் நான் எந்த நடிகனுக்கும் ரசிகனாக இருந்ததில்லை. ஆனால் நடிகர் நடிகைகள் பற்றிய செய்திகளையும், அவர்களைப் பற்றிய கிசுகிசுக்களையும் படித்திருக்கிறேன்.


நாமெல்லாம் ஏதோ வேலைக்குப் போய் சம்பாதிக்கிறோம். அவர்கள் நடித்து சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் வட்டம். ஏகப்பட்ட புகழ். பணம். அவர்களைப் பற்றியே செய்திகள். பல சமயங்களில் நாகேஷ் சிரித்து மகிழ்வித்திருக்கிறார். நகைச்சுவை நடிகர்களில் நாகேஷ் நடிக்காதப் படங்கள் இல்லை. அவர் படங்கள் பலவற்றை நான் ரசித்திருக்கிறேன். என் எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, டணால் தங்கவேலு என்ற பல சிரிப்பு நடிகர்களை நான் ரசித்திருக்கிறேன். முகத்தைக் கோணலாக வைத்துக்கொண்டு சந்திரபாபு செய்யும் அட்டகாசம் ரசிக்கும்படியாக இருக்கும். ஆனால் சந்திரபாபு பேசும்போது என்ன பேசுகிறார் என்பதை முழுவதும் புரிந்துகொள்ள முடியாது.


செய்கை அதிகமில்லாமல் பேச்சு மூலம் நகைச்சுவை உணர்வை காட்டுபவர் என் எஸ் கிருஷ்ணன். டணால் தங்கவேலு கல்யாண பரிசு படத்தில் நடித்த நகைச்சுவை காட்சிகளை இன்னும் ரசிக்கலாம். எம்.ஆர் ராதா, டி எஸ் பாலையா முதலிய நடிகர்கள் நகைச்சுவை நடிகர்களாகவும் வில்லன் நடிகர்களாகவும் நடித்திருக்கிறார்கள்.


இந்தச் சிரிப்பு நடிகர்களிலேயே நாகேஷ் தனிரகம். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பது என்பது சாதாரண விஷயமல்ல. நாகேஷிடம் செய்கையும் உண்டு பேச்சும் உண்டு. பாடல் காட்சிகளில் நாகேஷ் ஆடிய நடனங்களும் ரசிக்கும்படியாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட பல சோதனைகளையும் பத்திரிகைகள் மூலம் அரசல்புரசலாக தெரிந்துகொண்டிருக்கிறேன். நகைச்சுவை நடிகர்களிலேயே ரொம்பவும் மரியாதைக்குரியவராகக் கருதபட்பட்டவர் என்.எஸ்.கிருஷ்ணன்தான்.


நடிப்பிலிருந்து விலகி பத்திரிகையாளராகவும், அரசியல் விமர்சகராகவும் மாறியவர் சோ ராமசாமி. நடிப்புடன் நின்றுவிட்ட நாகேஷ், அந்தப் பணியைச் சிறப்பாகவே செய்து காட்டியவர். அவர் நடித்த பல படங்களை உதாரணம் காட்டலாம். நீர்க்குமிழி போன்ற சோகமான படத்திலும் நாகேஷ் அடிக்கும் லூட்டியை ரசிக்காமல் இருக்க முடியாது. எல்லோருக்கும் வயதாகிவிட்டால் வேறுவிதமாக மாறிவிடுவார்கள். அவர்கள் தொடர்ந்து இயங்கி வந்த இயக்கத்திலிருந்து புறம் தள்ளப்படுவார்கள். அப்போதெல்லாம் அவர்கள் வாழ்க்கையை எப்படி நடத்திக்கொண்டு போக வேண்டும் என்பது முக்கியமானது.


புகழ் உச்சாணியிலிருந்து அவர்கள் புகழ் போய்விடும். மக்களுக்கும் அவர்களுக்கும் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டுவிடும். நான் மிகவும் ரசித்த ராஜகுமாரி என்ற நடிகையின் மரணம் பற்றிய செய்தி வந்தபோது, மரணம் அடைந்த போது இருந்த அவருடைய தோற்றத்தை படம் எடுத்து வெளியிட்டிருந்தார்கள். என்னால் அந்த் தோற்றத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ராஜகுமாரி என்ற நடிகையின் அழகு தோற்றத்தையே கற்பனை செய்த எனக்கு, மரணம் அடைந்த தோற்றத்தில் இருந்த ராஜகுமாரியை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை.



மேலும் நடிகர் நடிகைகளுடன் நமக்குப் பழக்கம் இருந்தால், அவர்கள் சாதாரணத்திலும் சாதாரணம் என்று தெரிந்துவிடும். ஒரு முறை புத்தகம் விற்பதற்காக ஒரு யுக்தியைக் கையாண்டது ஒரு அமைப்பு. டணால் தங்கவேலுவை அழைத்து புத்தகம் விற்பதற்காக கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்தது. நடிப்பிலிருந்து விலகி எல்லோருடைய நினைவிலிருந்து விலகிப்போன தங்கவேலு, புத்தகம் விற்கும் இடத்திற்கு வந்து அமர்ந்தார். அவரைப் பற்றி எல்லோரும் அறிவிப்பு செய்தார்கள். நானும் விருட்சம் புத்தகம் சிலவற்றைக் கொண்டு சென்றேன். மேடையில் தங்கவேலு முன்னால் எல்லாப் புத்தகங்களையும் பார்வைக்கு வைத்திருந்தார்கள். ஆனால் ஒருவர் கூட தங்கவேலுவிடமிருந்து புத்தகம் வாங்கவில்லை. நடிப்பிலிருந்து விலகியபின் இதுதான் தங்கவேலுவிற்குக் கிடைத்த மரியாதை.


எனக்குத் தெரிந்தவரை நாகேஷிற்கு இதுமாதிரியெல்லாம் நிகழவில்லை. எல்லாப் பார்வையிலிருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டுவிட்டார். அவரும் விலகி விட்டார். எல்லோருமே அப்படித்தான். ஆனால் சிலர் விதிவிலக்கு. எம்.ஜி.ஆர் நடிகர் மட்டுமல்ல. மக்களைக் கவர்ந்தவர். ஓரளவு சிவாஜி. இன்று ரஜினி, கமல். இது ஒருவிதத் தோற்றம்தான். இந்தத் தோற்றமும் மறைந்துவிடும். புத்திசாலியாக இருப்பவர்களைப் பற்றி எப்போதும் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பார்கள்.



நாகேஷ் மறைந்தாலும் அவரைப்பற்றி அலுவலகத்தில் பேசாமலில்லை. நாகேஷிற்கு குண்டுராவ் என்பது இயற்பெயராம். அந்தப் பெயர் எனக்குச் சற்றும் பிடிக்கவில்லை. அவர் சாகும் தறுவாயில் அவருக்கு mental depression என்று ஒருவர் சொன்னார். ஆனால் எனக்குத் தெர்ந்த நாகேஷ் படத்தில் மட்டும் இருக்கிறார். எல்லோரையும் மகிழ்விக்க. என்ன இருந்தாலும் ஒருவர் மறைந்துவிட்டார் என்பது மனதில் சற்று சஞ்சலம்தான். சில நேரம் இறந்தவரைப் பற்றி நினைக்கத் தோன்றாமலில்லை. எங்கள் flatல் குடியிருக்கும் ஒரு பெண்மனி வீடைக் காலிசெய்து கொண்டு போய்க்கொண்டிருப்பதை வீட்டிற்கு வந்து சொன்னார். அவர் அந்த இடத்தை விட்டுப் போகப்போகிறதா என்ற எண்ணம் சற்று மனதில் நெருட ஆரம்பித்தது. இத்தனைக்கும் அந்தப் பெண்மணி என்னுடன் ஆரம்பத்தில் சண்டைக்கு வந்தவர். பெரும்பாலும் என்னைப் பார்த்தாலும் பேச மாட்டார். போகும் போது சொல்லிக்கொண்டு போகும்போது சற்று மனதில் நிழலாடிய வருத்தத்தை என்னவென்று சொல்வது.






7