8.6.10

ஆறு கவிதைகள்



1.

வானத்தில்

நீண்ட

தொலை தூரத்தில்

எல்லாம்

கணக்கில்லாமல்

பறக்கும் புள்ளினங்கள்


2.

விதிர்விதிர்த்துப் போனேன்

எங்கும்

ஓய்ச்சலில்லாமல்

சத்தம் போட்டபடி

பறக்கும்

வாகனங்கள்


3.

அந்தக் கோயிலில்

வீற்றிருக்கும்

வியாக்கிழமை

ஓடணிந்து அமர்ந்திருக்கும்

பிச்சைக்காரர்கள்

காவித்துணியில் ஜொலிக்கிறார்கள்

சிவனடியார்களாய்


4.

பெட்டிபோல்

வீட்டில் குடியிருக்கிறேன்

பெட்டியிலிருந்து

வெளியில் வந்து

பெட்டிக்குள் நுழைந்து

விடுகிறேன்.


5.

அந்தப் பெண்ணின்

மார்பகங்கள்

படபடத்துக் கொண்டிருந்தன

தடவிக்கொடுக்க

கையை நீட்டினேன்

கை நீண்டுகொண்டே

போயிற்று...


6.

வெகுநேரம்

வெகுநேரம்

கண்ணை மூடிக்கொண்டிருக்கிறேன்

கண்ணைத் திறந்தும் பார்த்தேன்

உலகம் ஒன்றும் மாறவில்லை

21.4.10

புள்ளி என்ற பெயரில் சின்ன கவிதைத் தொகுதி..

அக்ரகாரத்துக் கதவுகள்

எங்களூர் அக்ரகாரத்தில்

அதிசியங்கள் ஆயிரம் உண்டு

செம்மண் பட்டையிட்டு

செங்காவிச் செறிவீச்சில்

கொலுவிருக்கும் வீடுகளின்

ஜன்னல்களுக்கோ

கதவுகளே இல்லை

ஆனாலும்

டெர்ரிக்காட் பளபளப்பில்

குதிகால் நடையுயர்த்தி

நட்ட நடுத்தெருவில்

நீள நடந்தால்

கறுப்பு சிவப்பு

பழுப்பு மாநிறப்

பரபரப்பு முகங்கள்

கதவுகளாய் முளைக்கும்

- நா. விச்வநாதன்

25.3.10

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதி



மூன்று கவிதைகள்



முட்டி முட்டிப்

பால் குடிக்கின்றன


நீலக் குழல் விளக்கில்


விட்டில் பூச்சிகள்



உள்ளே



மழைக்குப் பயந்து


அறைக்குள் ஆட்டம்


போட்டன துவைத்த துணிகள்



விடலைகள்



துள்ளித் துவண்டு


தென்றல் கடக்க


விஸில் அடித்தன


மூங்கில் மரங்கள்



- பாலகுமாரன்



பின் குறிப்பு : கவிஞர் ஆனந்த் வீட்டிற்கு ஒரு முறை சென்றிருந்தேன். அவர் கையில் வைத்திருந்த சில புத்தகங்களைக் கொடுத்தார். அதில் ஒன்றுதான் புள்ளி என்ற இப் புத்தகம். கைக்கு அடக்கமான இப் புத்தகத்தைப் போல் ஒன்றை தயாரித்து எல்லோருக்கும் இலவசமாக வழங்க வேண்டுமென்பது என் அவா. எப்படி இந்தச் சிறிய புத்தகத்தில் நவீன ஓவியர்களின் படங்களுடன் புத்தகம் கொண்டு வர முடிந்தது? ஆச்சரியமாக உள்ளது.
- அழகியசிங்கர்

19.3.10

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதி

பூக்கள்

வெட்கமின்றி சிரித்தது

கொட்டும் மழையில்

குளிக்கும் ரோஜாப்பூ


சூரியன் மறைவில்

கூம்பிய மலர்கள்

மூடிப்பிடித்தவை அப்

பாவி வண்டுகள்


பனிபூக்க முகம் பூக்கும்

நான் வளர்க்கும்

ரோஜாப்பூ


மனிதரோடு மாடுகள்

போகும் ஊரோர

தார்ச்சாலை மரங்கள்

இறைந்திருக்கும்

மலர்கள்


இரவில் ஊரார் கால்

கழுவ

போகுமிடம் பெருமாள்

குளம்

புண்ணாய் நீரெல்லாம்

ஊதாப்பூ


வேலைக்குப் போகும்

மகளிராய்

பஸ் ஸ்டாண்டில்

கூடைப்பூ


அருகழைத்து பின்

விரதமென்று புறந்

தள்ளும் பவழ மல்லி.


- பதி

16.3.10

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத்





விதி


அந்திக் கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் குஞ்சுக்காய்
தன் கூட்டுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை

- கலாப்ரியா

12.3.10

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதி

திட்டமற்ற......


வானம் கட்டுப் பாடற்று

பெற்றுத் திரியவிட்ட

மேகங்கள்

பொல்லா வாண்டுகள்

நினைத்த இடத்தில்

கவலையற்று

நின்று தலையில் பெய்துவிட்டு

மூலைக்கொன்றாய்

மறையுதுகள்

வெள்ளை வால்கள்

- எஸ் வைதீஸ்வரன்