25.2.13


அலைதலின் முற்றுகை 


கோவில் மதிற்சுவர் நரகல் மணம் கூசுவதொத்த 
மனம் எனது 

தவறவிட்ட 
பிடித்தே ஆகவேண்டிய தொடர்வண்டியை 
மழையும் வெயிலும் 
துரத்திக் கொண்டிருக்கிறது 

மேல்நோக்கி 
கீழிறங்கி 
அந்தரத்தில் மிதந்து அலையும் 
இறகு ஒன்றினைத் தனதாக்க 
நெஞ்சு விம்ம விம்ம 
கைகளை நீள.. நீள... நீட்டுகிறேன் 

ஓணான் அடிக்கும் குழந்தைகளை 
யதேச்சையாய்க் கடக்கிறேன் 

தொப்பலென 
உனதான எனக்கானத் தாய்மடியில் 
தலை வைத்து சாய்ந்து கொண்டேன்

*** 

ஆறுமுகம் முருகேசன் 

7.3.11

ஜோல்னாப் பைகள்

விதம்விதமாய் ஜோல்னாப் பைகளை
சுமந்து வருவேன்
பார்க் ரயில்வே ஸ்டேஷன் வாசலில்
கூவி விற்பார்கள் ரூபாய்க்கு பத்தென்று
வகைவகையாய்ப் பைகளை வாங்குவேன்
வீட்டில் உள்ளவர்களுக்கு
ஏனோ பிடிப்பதில்லை
நான் வாங்கும் ஜோல்னாப் பைகளை

பைகளில் ஸ்திரமற்ற தன்மையை
கொஞ்சம் அதிக கனமுள்ள
புத்தகங்களை சுமக்காது
ஓரம் கிழிந்து தொங்கும்
இன்னொரு முறை தையல் போடலாமென்றால்
மூன்று பைகளை வாங்கும்
விலையை வாய்க்கூசாமல் கேட்பார்கள்

ஜோல்னாப் பைகள்
மெது மெதுவாய் நிறம் மாறி
வேறு வேறு விதமான
பைகளாய் மாறின
ஆனால் என்னால் பைகளை விடமுடியவில்லை
உறவினர் வீட்டிலிருந்து
அளவுக்கதிமாய் தேங்காய்களை
உருட்டிவர
சாக்குப் பைகள் தயாராயின

மைதிலிக்கு மனசே வராது
என்னிடம் பைகளைத் தர
வீட்டில் புத்தகக் குவியலைப்
பார்க்கும் கடுப்பை
பைகளில் காட்டுவாள்
ஆனால் என்னால் பைகளை விடமுடியவில்லை

பைகளில் இன்னது என்றில்லாமல்
எல்லாம் நுழைந்தன சுதந்திரமாய்

வீரன் கோயில் பிரசாதம்
மதியம் சாப்பிடப் போகும் பிடிசாதம்
வழுக்கையை மறைக்க
பலவித நிறங்களில் சீப்புகள்
உலக விசாரங்களை அளக்க
ஆங்கில தமிழ் பத்திரிகைகள்
சில க.நா.சு கவிதைகள் புத்தகங்கள்
எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கும்
போன ஆண்டு டைரி

பின்
பின்
உடைந்த சில
கண்ணாடி வளையல் துண்டுகள்
பேப்பர் வெயிட்டுகள்
எல்லாம் எப்படி வந்தன
பைக்குள்...

22.2.11

எது கவிதை........2

ஓய்வுபெற்ற என் அலுவலக மேலதிகாரி ஒருவர் தமிழில் புலமை வாய்ந்தவர். சரளமாக இலக்கணத்துடன் கவிதை எழுதுபவர். ரொம்ப கஷ்டமான அரவிந்தரின் Perseus the Deliverer என்ற நாடகத்தை தமிழில் கவிதை வடிவமாக 286 பக்கங்கள் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார். கவிதையாக அந் நாடகம் தமிழில் வெளிவந்துள்ளது. அப்புத்தகத்தைப் பார்க்கும்போது எனக்கு திகைப்பாக இருந்தது. பின் அப்புத்தகத்தைப் படிக்கும்படி கேட்டபோது எனக்குப் பிரச்சினையாகப் போய்விட்டது. எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது ஒரு பக்கம். அதை என்னால் படிக்க முடியவில்லை என்பது சங்கடமாகப் போய்விட்டது. அப்புத்தகத்தை என்னால் படிக்கவே முடியவில்லை. ஏன்?

கவிதையின் புது வடிவம் பிறந்தபிறகு பழைய மரபெல்லாம் போய்விட்டது. ஆனால் இன்னும் பலபேர் பழைய மரபிலேயே கவிதை எழுதிக்கொண்டு போகிறார்கள். அமுதசுரபி என்ற பத்திரிகையில் இன்னும் வெண்பா போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதுமாதிரியான கவிதைகளில் பெரும்பாலும் அதை அமைக்கும் முறையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதால் சாராம்சம் போய்விடும். பின் நீண்ட கவிதை.
என்னால் நீண்ட கவிதைகளைப் படிக்கவே முடியவில்லை. கவிதையை நாடகமாக எழுதிப் படிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

கவிதை என்பது ஒரு பக்கத்தில் நின்று விடவேண்டும். அதன் பின்னும் அதை நீட்டினால், கொஞ்சம் நீர்த்துப்போகக்கூடிய வாய்ப்புண்டு. நகுலனின் நீண்ட கவிதைகள் இரண்டை நான் விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்துள்ளேன். ஆனால் முழுவதும் ரசித்துப் படிக்க முடியுமா என்பது தெரியவில்லை. கவிதையை அதிகப் பக்கங்கள் கொண்டு வந்தால், படிக்க தடுமாறும் இது என் அனுபவம். பலருடைய நீண்ட கவிதைகளை நான் படிப்பதில்லை. எங்காவது சில வரிகள். பாராக்கள் படிப்பதுண்டு. மனோன்மணியம், சிலப்பதிகாரம் கூட படித்ததில்லை. படிக்க விரும்பியதில்லை. ஏன்என்றால் அந்த அளவிற்கு பொறுமை இருந்ததில்லை. அதேபோல் ஹைகூ கவிதைகளைப் படிக்க விரும்பியதில்லை. கவிதை என்றால் கொஞ்சமாவது 6 வரிகளாவது வரவேண்டும்.

இந்த என் அனுபவத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை.

(இன்னும் வரும்)

4.2.11

எது கவிதை........1

ஒரு ஞாயிற்றுக்கிழமை காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, என் உறவினர் ஒருவர் ஒரு சினிமாப் பாடலாசிரியர் பெயரைக் குறிப்பிட்டு அவர் கவிஞர்தானே என்றார். சினிமா பாடலாசிரியர் ஒவ்வொருவரும் சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களை கவிஞர்கள் என்று கூறிவிட முடியாது. கவிதை வேறு சினிமாப் பாடல் வேறு. சினிமா பாடல் எழுதுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். புகழ் அடையலாம். கவிதை அப்படி அல்ல. இன்னும் கேட்டால் கவிதை எழுதுபவர்கள் யாரும் தன்னை கவிஞர் என்று சொல்லிக்கொள்ள விருப்பப் படமாட்டார்கள். நிஜமாக கவிதை எழுதுபவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

பாரதியின் வசன கவிதையிலிருந்து ஒரு மாற்றம் இருந்தாலும், கவிதை பலவிதப் போக்கில் செல்ல ஆரம்பித்து விட்டது. ந.பிச்சமூர்த்தி கூட கொஞ்சம் மரபு கொஞ்சம் புதுக்கவிதை என்று தாவிக்கொண்டிருந்தார். க.நா.சுதான் கவிதையின் புதிய பாதையை இன்னும் திறந்து வைத்தார். இன்று கவிதை பலவிதப் போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. என் நண்பர் லாவண்யா அவருடைய மூன்றாவது கவிதைத் தொகுதியைக் கொண்டுவர யோசனை செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

கவிதைப் புத்தகம் கொண்டு வருவது எளிது. அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி விற்பது மிக மிகக் கடினம். ஒரு நூறு உண்மையான கவிதை எழுதுபவர்கள் (கவிஞர்கள் என்று சொல்ல விரும்பவில்லை) இருந்தாலும், ஆயிரம் பொய்யான கவிதை எழுதுபவர்கள் உருவாகி இருப்பார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் என்னை ஒருவர் அவர் மனைவியுடன் பார்க்க வந்தார். அவரிடமுள்ள கவிதைப் புத்தகத்தை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். 'ஆயிரம் புத்தகங்கள் அச்சடித்துள்ளேன்,' என்றார். எனக்கு திகைப்பாக இருந்தது. 'எப்படி விற்கப் போகிறீர்கள்? யார் கண்ணிலும் படாமல் வைத்துக் கொள்ளுங்கள்,' என்றேன். அந்தப் புத்தகம் கொண்டு வந்ததில் அவருடைய மனைவிக்கு விருப்பமில்லை என்பதும் தெரிந்தது.

உண்மையில் கவிதை எழுதுபவர்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு நூறு பேர்களாவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அந்த நூறு பேர்களும் கவிதை என்று சொல்லும்படி ஒரு கவிதையாவது எழுதியிருப்பார்கள். ஆனால் எழுத முடியாதவர்கள் கவிதை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கவிதை நூல்களை வெளியிட்டு உண்மையாகவே கவிதை எழுத வேண்டுமென்று உந்துதல் உடையவர்களை காணாமல் ஆக்கி விடுகிறார்கள். சினிமா பாடலாசிரியர்களின் பங்கு இதில் முக்கியமானது.

புதியதாக கவிதை எழுதுபவர்கள் வர வர ஏற்கனவே கவிதை எழுதி அலுத்துப் போனவர்கள் dropout ஆகி விலகிப் போய்விடுவார்கள். இன்று ஏராளமான கவிதைகள் சந்தையில் வெளி வர ஆரம்பித்து விட்டன. நிஜக் கவிதைகளை இவை மலினப்படுத்தி விடுகின்றன.

திரும்பத் திரும்ப சொல்லப்படுகிற விஷயங்களே அதிகம் என்பதால் எந்தக் கவிதைப் புத்தகத்தையும் முழுதாகப் படிக்க முடியவில்லை. கவிதை என்று எழுதி புத்தகமாகக் கொண்டு வந்தபின் கவிதை படிப்பவர் பக்கம் தாவி விடுகிறது. அவ்வளவுதான் படிப்பவர்கள் மனது வைத்தால்தான் கவிதையை உருவாக்க முடியும். ஒரு தேர்ந்த வாசகன் சிறந்த கவிதைகளை அடையாளம் கண்டு விடுவான். அப்படிப்பட்ட தேர்ந்த வாசகனை விரல்விட்டு எண்ணி விடலாம்.

கவிதை எழுதும் ஒவ்வொருவரும் கவிதையை ரசிப்பவர்களாக இருக்கிறார்கள். பின் கவிதை எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள். எழுதி புத்தகமாகக் கொண்டு வந்தபிறகு அவர் எழுதுவதுதான் கவிதை என்று நம்பி விடுகிறார்கள். நவீன விருட்சம் பத்திரிகையை ஆரம்பித்து 23 ஆண்டுகளில் நான் கவிதை எழுதுபவர்களிடம் உள்ள போட்டியையும் பொறாமையும் பார்த்து வியந்திருக்கிறேன். எழுதுபவர்கள் குறைவு. படிப்பவர்கள் அதைவிட குறைவு. ஆனால் சண்டை வலுவானது.

பசுவய்யா, ஞானக்கூத்தன், பிரமிள் போன்ற படைப்பாளிகள் விருட்சத்தில் பங்கு அளித்திருக்கிறார்கள் என்று என் பத்திரிகையில் எழுதியிருந்தேன். 'அது எப்படி அவர்கள் இருவர் பெயர்களுடன் என் பெயரை சேர்க்கலாம்,' என்று பிரமிள் என்னிடம் சண்டைக்கே வந்துவிட்டார்.

அதேபோல் ஒரு காலத்தில் எழுதப்பட்ட கவிதைகளை இன்னொரு காலத்தில் படிக்கும்போது ஏற்கனவே எழுதியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கவிதையைக் குறித்து இன்னும் யோசித்துப் பார்க்கலாம்.

(இன்னும் வரும்)

8.6.10

ஆறு கவிதைகள்



1.

வானத்தில்

நீண்ட

தொலை தூரத்தில்

எல்லாம்

கணக்கில்லாமல்

பறக்கும் புள்ளினங்கள்


2.

விதிர்விதிர்த்துப் போனேன்

எங்கும்

ஓய்ச்சலில்லாமல்

சத்தம் போட்டபடி

பறக்கும்

வாகனங்கள்


3.

அந்தக் கோயிலில்

வீற்றிருக்கும்

வியாக்கிழமை

ஓடணிந்து அமர்ந்திருக்கும்

பிச்சைக்காரர்கள்

காவித்துணியில் ஜொலிக்கிறார்கள்

சிவனடியார்களாய்


4.

பெட்டிபோல்

வீட்டில் குடியிருக்கிறேன்

பெட்டியிலிருந்து

வெளியில் வந்து

பெட்டிக்குள் நுழைந்து

விடுகிறேன்.


5.

அந்தப் பெண்ணின்

மார்பகங்கள்

படபடத்துக் கொண்டிருந்தன

தடவிக்கொடுக்க

கையை நீட்டினேன்

கை நீண்டுகொண்டே

போயிற்று...


6.

வெகுநேரம்

வெகுநேரம்

கண்ணை மூடிக்கொண்டிருக்கிறேன்

கண்ணைத் திறந்தும் பார்த்தேன்

உலகம் ஒன்றும் மாறவில்லை

21.4.10

புள்ளி என்ற பெயரில் சின்ன கவிதைத் தொகுதி..

அக்ரகாரத்துக் கதவுகள்

எங்களூர் அக்ரகாரத்தில்

அதிசியங்கள் ஆயிரம் உண்டு

செம்மண் பட்டையிட்டு

செங்காவிச் செறிவீச்சில்

கொலுவிருக்கும் வீடுகளின்

ஜன்னல்களுக்கோ

கதவுகளே இல்லை

ஆனாலும்

டெர்ரிக்காட் பளபளப்பில்

குதிகால் நடையுயர்த்தி

நட்ட நடுத்தெருவில்

நீள நடந்தால்

கறுப்பு சிவப்பு

பழுப்பு மாநிறப்

பரபரப்பு முகங்கள்

கதவுகளாய் முளைக்கும்

- நா. விச்வநாதன்

25.3.10

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதி



மூன்று கவிதைகள்



முட்டி முட்டிப்

பால் குடிக்கின்றன


நீலக் குழல் விளக்கில்


விட்டில் பூச்சிகள்



உள்ளே



மழைக்குப் பயந்து


அறைக்குள் ஆட்டம்


போட்டன துவைத்த துணிகள்



விடலைகள்



துள்ளித் துவண்டு


தென்றல் கடக்க


விஸில் அடித்தன


மூங்கில் மரங்கள்



- பாலகுமாரன்



பின் குறிப்பு : கவிஞர் ஆனந்த் வீட்டிற்கு ஒரு முறை சென்றிருந்தேன். அவர் கையில் வைத்திருந்த சில புத்தகங்களைக் கொடுத்தார். அதில் ஒன்றுதான் புள்ளி என்ற இப் புத்தகம். கைக்கு அடக்கமான இப் புத்தகத்தைப் போல் ஒன்றை தயாரித்து எல்லோருக்கும் இலவசமாக வழங்க வேண்டுமென்பது என் அவா. எப்படி இந்தச் சிறிய புத்தகத்தில் நவீன ஓவியர்களின் படங்களுடன் புத்தகம் கொண்டு வர முடிந்தது? ஆச்சரியமாக உள்ளது.
- அழகியசிங்கர்