14.6.08

இன்று உலகப் புத்தக தினம்



எல்லாக் குப்பைகளையும் தூக்கி
தெருவிலுள்ள குப்பைத் தொட்டியில் போட்டாள்
என் புத்தகங்களைப் பார்த்து
மலைத்து நின்றாள்
என்ன செய்வதென்று அறியாமல்
பின் ஆத்திரத்துடன்
தெருவில் வீசியெறிந்தாள்
போவார் வருவார் காலிடற
புத்தகங்கள் சிதறிக் கிடந்தன தெருவெல்லாம்
ஒரு புத்தகம் திறந்தபடியே இருந்தது
அதிலுள்ள வரிகள் எல்லார் கண்களிலும்
படித்தவர்கள் சிரித்தபடியே சென்றனர்
எல்லார் முகங்களிலும் புன்னகை
நானும் ஆவலுடன்
மாடிப்படிக்கட்டிலிருந்து
தடதடவென்று இறங்கி
புத்தகத்தின் வரியை
ஒழுங்காய் நிலைகொள்ளாத
வேஷ்டியுடன் படித்தேன்
'இன்று உலகப் புத்தக தினம்
இன்றாவது புத்தகம் படிக்க
அவகாசம் தேடுங்கள்'
நானும் சிரித்தபடியே
புத்தகத்தில் விட்டுச் சென்ற
வரிகளை நினைத்துக்கொண்டேன்
இடுப்பை விட்டு நழுவத் தயாராய் இருக்கும்
வேஷ்டியைப் பிடித்தபடி.....

3 comments:

  1. விருட்சம் மற்றும் உங்களின் வாசகன் நான். நீங்கள் வலைப்பதிய தொடங்கியது குறித்து மகிழ்ச்சி.

    (முடிந்தால் word verificationஐ எடுத்துவிடுங்கள். பின்னூட்டச் சிரமமாக இருக்கிறது).

    ReplyDelete
  2. அன்புடையீர்,

    என் கவிதையைக் குறித்து தாங்கள் எழுதிய கருத்தை அறிந்தேன். நன்றி.

    அழகியசிங்கர்

    ReplyDelete