23.7.08

புட்டா சுந்தரசாமியின் சென்னை விஜயம்

பெங்களூரிலிருந்து வந்திறங்கினார்
புட்டா சுந்தரசாமி
எங்களூருக்கு.
ஹஸ்தினாபுரம் கிளையை
ஒரு கலக்கு கலக்க ஏபிஎம் ஆக.
பாதி கன்னடம், பாதி தமிழ்
எல்லோரும் அரைகுறை ஆங்கிலத்தில்
அவருடன் உரையாடுவோம்

ஏறக்குறைய என் வயது
அவரைப் போல தோற்றத்தில்
முன் வழுக்கையோடு
உயரம் சற்று கூடுதலாக
இன்னொருவர் இருக்கிறார் எங்கள்
அலுவலகத்தில்

வியாதிகளிலே எங்கள் இருவருக்கும்
பொதுத் தன்மை உண்டு

குடும்பத்தினரை விட்டு விட்டு
தனிமை வாசம்
அதுவே தனி விசாரம்
தற்போது இருக்குமிடம்
பெரும் குழப்பம்
மாதம் ஒன்று ஆகப் போகிறது
தங்கும் இடம் தேடி தேடி
தளர்ந்து போகிறார் புட்டா சுந்தரசாமி

தினம் தினம்
எங்களில் ஒருவரோடு
வீடு தேடும் படலம்
பார்க்கும் வீடெல்லாம்
ஏனோ கோணலாய்த் தெரிகிறது
வசதியாய் பங்களுரில் இருந்தவருக்கு
வாழுமிடமெல்லாம் நரகமாய்த் தெரிகிறது

நீண்ட கூடம்போன்ற
அறை இருந்தால் வாடகை
மலைக்க வைக்கிறது
கொஞ்சம் மிச்சம் பிடித்து
வீட்டிற்கும் பணம் அனுப்ப வேண்டுமென்று
நினைக்கிறார் பாவம் புட்டா சுந்தரசாமி

அலுவலகத்திற்கு எதிரே ஒரு இடம்
இருந்தது. போய்ப் பார்த்தார்
இடமும் பிடித்திருந்ததுஆனால்
இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமாம்
பாத்ரூமையும், லெட்ரீனையும்
கேட்டவுடன் மூக்கைப் பொத்தியபடியே வந்துவிட்டார்
புட்டா சுந்தரசாமி
நாற்றம் அவரைச் சூழ்ந்து கொண்டதோ

இன்னும் சில இடங்கள்
வாகாய் இல்லை
சுகாதார கெடுதலை தரும்
இடமெல்லாம் கண்ணில் பட்டு
வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க வைக்கிறது

ஒரு இடத்தில்
கொசுக்கள் தொல்லை அதிகம்
எதாவது சமயத்தில்
மழைப் பெய்தால்
பாம்புகள் நெளியுமாம்
போதுமடா புட்டா சுந்தரசாமி

தன் துயரங்களை
வெளிவாசலில் நின்றபடி
புகை ஊதியபடி
எல்லோரிடம் ஆங்கிலமும் தமிழும்
கலந்துரையாடியபடியே
அழுக்கு ரூம் ஒன்றில்
தற்காலிகமாகக் காலத்தைக் கழிக்கிறார்
புட்டா சுந்தரசாமி

கட்டாயம் சனிக்கிழமைகளில்
பங்களூருக்கு ஓடி விடுகிறார்
குடும்பத்தைப் பார்க்க..

எங்களூருக்கு வந்த பங்களூர்
ஏபிஎம் புட்டா சுந்தரசாமி படும்பாட்டைப் பார்த்தீரா?

No comments:

Post a Comment